அது ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை .சினிமா தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்தது. சினிமா துவங்கும் முன் சிகரெட், பிடி, முறுக்கு ,கடலை உருண்டை என நல்ல வியாபாரம் . சினிமா ஆரம்பிக்கும் நேரம் தவிர , மற்ற நேரங்களில் வியாபாரம் சுமார்தான். 20 வருடங்களாக அந்த கடையின் முதலாளி சுருட்டு தாத்தா. ஆம் அவரை அனைவரும் அப்படித்தான் அழைப்பர்.
ஒல்லியான கருத்த தேகம். நரைத்த வெள்ளை முடி. தலையில் ஒரு துண்டு. வெயில் காலம் என்றால் சட்டை போட்டிருக்க மாட்டார். வேஷ்டி மட்டும் தான். சிரித்த முகம் சிலரிடம். கண்டிப்பான முகம் சிலரிடம். . ஓய்வு நேரங்களில் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பார். பெட்டிக்கடை என்றாலும், ஓரளவு சகலவித பொருட்களும் அங்கு கிடைக்கும்.
“தாத்தா … தாத்தா ஐம்பது காசுக்கு கடலை மிட்டாய்.”
“இந்தா பேராண்டி எடுத்துக்கோ. ” அன்போடு கன்னத்தில் ஒரு தட்டு தட்டி அனுப்புவார். இது சுருட்டு தாத்தாவின் கரிசனம்.
“என்ன தாத்தா. எப்படி இருக்கீங்க?. ஒரு சொக்கலால் பிடி கட்டு.”
“ம்..ம். நல்லா இருக்கேன் தம்பி.. நீ எப்படி இருக்கப்பா.? வயல்ல விவசாயம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? நல்ல மழை தானே. இந்த வருஷம் நல்ல விளைச்சலா.. ?ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளே காணோம். அப்பப்போ வந்து, இந்த தாத்தாவை பார்த்திட்டு போ தம்பி”. உரிமையோடு கூறுவார்.
“சரிங்க அய்யா. வேலை இல்லையினா, இந்த பக்கம் தான் வருவேன் அய்யா. உங்களோட வந்து பேசினாலே நாட்டு நடப்பு எல்லாம் அத்துபடியா தெரிஞ்சுக்கலாம்.. வரேன் அய்யா.”
“போய் வா தம்பி.”
“தாத்தா… தாத்தா… எங்க அம்மா… கம்பெனியிலிருந்து வர லேட் ஆகும். நாளைக்கு…நான் ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண வேண்டும். ஒரு என்பது பக்க, கோடு போட்ட நோட்டு கொடுங்க தாத்தா. அம்மா வந்தப்புறம் காசு கொண்டு வந்து கொடுத்துடறேன்.”
“அதுக்கு என்ன பேராண்டி… எடுத்துட்டு போ. உனக்கு இல்லாததா..!”
மகிழ்வோடு எடுத்துக் கொடுத்தார் சுருட்டு தாத்தா.
“அய்யா இரண்டு ‘கோல்டு பிளேக்’ சிகரெட் பாக்கெட்.”
தாத்தா கவனிக்காதது போல் வேறு வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கேட்டான் ‘அய்யா ரெண்டு கோல்ட் பிளேக் சிகரெட்’. முகத்தைத் தூக்கிப் பார்த்து, ஒரு முறை முறைத்து விட்டு, கீழே குனிந்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து… “பழைய பாக்கி என்ன ஆச்சு.” இது தாத்தாவின் கேள்வி.
அசடு வழிந்தவன்… “அடுத்த வாரம் தந்துடறேன்”
“இதே பதிலைத் தான் வாரம் வாரம் சொல்ற. சரி அப்போ அடுத்த வாரம் வந்து சிகரெட் வாங்கிக்கோ. இப்போ நடையை கட்டு…” என்று கூறி தன் வேலையை பார்க்க துவங்கி விட்டார். அவன் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு கிளம்பினான்.
“வந்துட்டான் சிகரெட் வாங்க. காசு கொடுத்து வாங்க துப்பு இல்ல. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான். 30 வயசு ஆகுது. ஒரு வேலைக்கும் போகல. ஊரை சுத்திகிட்டு சிகரெட் குடிக்க மட்டும் வந்துருவான். இவனுக்கு கோல்ட் பிளேக் கேக்குது. சொக்கலால் பீடிக்கே காசு இல்ல. கேட்கிறது கடன். வாய் கூசாம பொய் வேற..” தனக்குள், ஆனால் அவனுக்கு கேட்கும் படி, முணுமுணுத்துக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு சிறுவன் ஓடி வந்தான். தாத்தா தாத்தா எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தாத்தா. மண்பானை தண்ணி இருந்தா குடுங்க தாத்தா.
தாத்தா அவனைப் பார்த்து விட்டு, “தண்ணி தாகமா இல்ல பசியா..? சும்மா சொல்லு”.
அவன் ஏதும் சொல்லவில்லை. மௌனமாய் நின்றான்.
தாத்தா நிலைமை புரிந்து, ஒரு மாம்பழ ஜூஸ் பாட்டிலும், ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டையும் எடுத்து கொடுத்தார்.
“அச்சிறுவன் வேண்டாம் தாத்தா… வேண்டாம். எனக்கு தண்ணி மட்டும் போதும்”.
“பரவாயில்ல பேராண்டி. சாப்பிடு நல்லா சாப்பிடு”. சிரித்துக் கொண்டே அவனின் தலையை அன்போடு தடவி விட்டார்.
இட்டார் பெரியோர். சிலருக்கு, சில நேரங்களில், இடாதோரும் பெரியோரே.